என்ன ஆனார் வேந்தர் மூவிஸ் மதன்?
காசியில் சமாதியாகிறேன் என்று பிரபல தயாரிப்பாளர் வேந்தர் மூவிஸ் மதன் எழுதியுள்ள கடிதத்தால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபல வேந்தர் மூவிஸ் பட நிறுவனத்தை நடத்தி வந்தவர் மதன். இந்நிறுவனத்தின் சார்பில் இதுவரை 15 திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிட்டுள்ளார். பாயும்புலி உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்தார். இவரது நிறுவனம் சார்பாக வெளியிட்ட படங்கள் பெரிதாக வரவேற்பில்லை. இதனால் பொருளாதார ரீதியாக நஷ்டத்தில் தவித்து வந்தார் மதன்.
இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று மதன் தான் கங்கையில் சமாதியாகிறேன் என்று கடிதம் எழுதிவைத்து விட்டு மாயமானார். வேந்தர் மூவிஸ் லெட்டர்பேடில் எழுதப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் பாரிவேந்தர் மீதான தனது மரியாதையையும், சிலர் பரப்பிய அவதூறு காரணமாக அவர் மதனை புறக்கணிப்பதையும், பல கோடிகள் பாரிவேந்தருக்கு உதவி செய்ததையும் மதன் குறிப்பிட்டுள்ளார். இனியொரு ஜென்மமே வேண்டாம் என்று காசியில் சமாதியாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நீண்ட கடிதம் அவரால் எழுதப்பட்டதுதானே என்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் இந்த கடிதம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு தினங்களாக அவரை பற்றி எந்த தகவலும் இல்லாததால் அவரது குடும்பத்தினர் பதற்றமானார்கள். தற்போது மதன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வாரனாசி சென்றுள்ளனர். இந்தத் தேடுதல் வேட்டையில் அம்மா கிரியேஷன்ஸ் சிவாவும் நடிகர் ராகவா லாரன்ஸூம் சென்றுள்ளனர். அங்குள்ள காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் வாரணாசியில் மதன் தங்கியிருந்த விடுதி பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் அங்கு சென்று பார்த்தபோது அவர் காணப்படவில்லை. இதனால் 5 படகுகள் அமைத்து கங்கை நதியிலும் அவரைத் தேடிவருகிறார்கள். இது குறித்து தயாரிப்பாளர் சிவா கூறுகையில், பலருடைய உதவியுடன் வாரணாசியில் தேடிவருகிறோம் என்றும், இங்குள்ள காவல்துறையினர் நல்ல ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்தார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment