திருவனந்தபுரம் அருகே ஆசிரியையை நடுரோட்டில் குத்திக்கொன்ற ராணுவ வீரர்

Share this :
No comments

திருவனந்தபுரம் அருகே பள்ளி ஆசிரியையை நடுரோட்டில் குத்திக்கொன்ற ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்தை அடுத்த நேமத்தை சேர்ந்தவர் கங்காதரன். இவரது மகள் சுமிதா, (வயது 36).

நேமத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அட்டக்குளம்கரையைச் சேர்ந்த ராணுவ வீரர் குமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

2 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் குடும்ப தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். குழந்தைகள் இருவரும் ஆசிரியை சுமிதாவிடம் வளர்ந்து வந்தனர்.

கோர்ட்டு உத்தரவுப்படி மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளை தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும். அதன்படி, நேற்று சுமிதா குழந்தைகளை குமாருடன் அனுப்பி வைத்தார். நேற்று மாலை குழந்தைகளை மீண்டும் அழைத்துச் செல்ல நேமம் பஸ் நிலையம் அருகே காத்து நின்றார்.

அப்போது குமார் மட்டும் தனியாக வந்தார். அவரிடம் குழந்தைகளை அழைத்து வராதது ஏன்? என சுமிதா கேட்டார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுமிதாவை சரமாரியாக குத்தினார்.

நடுரோட்டில் நடந்த இச்சம்பவத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் குமாரை பிடிக்க முயன்றனர். அவர் பொதுமக்களையும் கத்தியை காட்டி மிரட்டி விட்டு அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறி தப்பிச்சென்றார்.

இதற்கிடையே நேமம் போலீசார் விரைந்து வந்து படுகாயங்களுடன் கிடந்த சுமிதாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுமிதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவரது கணவர் குமாரை தேடினர். அருகில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்த குமாரை போலீசார் கைது செய்தனர்.

No comments :

Post a Comment