வீட்டுவேலையால் பறிபோகும் அழகு... வீட்டிலேயே மீட்கும் டிப்ஸ்!

Share this :
No comments


பெண்கள் சமையல் செய்யும்போது ஏற்படும் சூட்டுக்காயத் தழும்புகள், பாத்திரம் கழுவும் `டிடர்ஜென்ட்’ வீரியத்தால் உள்ளங்கை தோல் உரிவது, நகங்கள் உடைவது மற்றும் துணி துவைக்கும்போது அதிக நேரம் தண்ணீரிலேயே நிற்பதால் பாதங்களில் பாக்டீரியா தொற்றினால் ஏற்படும் சேற்றுப்புண், பாதவெடிப்பு... இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் வீட்டிலேயே செய்யக்கூடிய சிம்பிள் டிரீட்மென்ட்களைச் சொல்கிறார், சென்னை, ‘விகாஷினி பியூட்டி சலூன்' உரிமையாளர், லஷ்மி மனோகரன்.

கைகள் மற்றும் நகங்கள்

சமையற்கட்டில் ஒவ்வொரு முறை தண்ணீரில் வேலைசெய்து முடித்ததும் கைகளைத் துடைத்து விட்டு, தரமான ஹேண்ட் க்ரீம் அப்ளை செய்யவும். கைகளில் தோல் உரிய ஆரம்பிக்கும்போதே, அரை மூடி எலுமிச்சைச் சாற்றுடன் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கலந்து, உள்ளங்கைகளில் கொட்டி பரபரவென தேய்த்து மசாஜ் செய்துவந்தால் தோல் உரிவது நிற்பதுடன், கைகள் மென்மையாக மாறும். எலுமிச்சைத் தோலை நகங்களின் மீது தேய்த்துவந்தால், மங்கிய நகங்களும் பளீர் என்றாகும். தினமும் ஒருமுறை சில துளிகள் பாதாம் எண்ணெய் எடுத்து நகங்களுக்கு மசாஜ் கொடுத்து வந்தால், நகங்கள் பளபளப்பாகவும், வலிமையாகவும் மாறும்.

பாதப் பராமரிப்பு

இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் வெதுவெதுப்பான நீர் சிறிதளவு சேர்த்துக் குழைத்து, பாதங்களின் விரலிடுக்குகளில் ஏற்படும் சேற்றுப் புண்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து அலசியவுடன், ஏதாவது ஒரு டால்கம் பவுடரை விரலிடுக்குகளில் பூசலாம். தினமும் ஒருமுறை இதைச் செய்தாலே சேற்றுப்புண் பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம்.

காயவைத்த வேப்பிலைகளை, தரமான கிழங்கு மஞ்சளை தனித் தனியாகப் பொடித்துக்கொள்ளவும். ஒரு ஸ்பூன் வேப்பிலை பொடிக்கு, ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி எடுத்துக்கொள்ளவும். அதனைக் குழைக்கத் தேவையான அளவு விளக்கெண்ணெய்/தேங்காய் எண்ணெய் கலந்து, இரவு படுக்கும் முன்பு, பாத வெடிப்புகளில் தடவி, ஒரு ஃபாயில் பேப்பரை பாதங்களில் சுற்றவும். காலை எழுந்ததும் ஃபாயில் பேப்பரை எடுத்துவிட்டுப் பாதங்களைக் கழுவவும். நாளடைவில் பாதவெடிப்பு குறையும்.

கிளிசரின், ரோஸ் வாட்டர், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்து, சிறிது உப்பு சேர்த்துக்கொள்ளவும். இதனை கால் பாதங்களின் மேல் மற்றும் அடிப்பகுதியில் தடவி, 10 நிமிடங்களில் கழுவவும். தினமும் செய்தால் மங்கிய பாதங்கள் பளபளவென மாறும்.

தீக்காயம்

சூடான பாத்திரங்கள் பட்டு கைகளைச் சுட்டுக்கொண்டால், உடனடியாக ரன்னிங் வாட்டரில் கைகளைக் காட்டவும். அடுத்ததாக உப்பு போட்ட நீர்க்கரைசலை சூடுபட்ட இடத்தில் தடவவும். பின் அங்கு தேன் அல்லது தேங்காய்ப்பாலோ, தேங்காய் எண்ணெயோ தடவவும். இது காயத்தை விரைந்து குணப்படுத்தும். அந்தத் தழும்பு மாற, தேங்காய்ப்பால், உருளைக்கிழங்குத் துருவல், கற்றாழை ஜெல் அல்லது கடற்பாசி (கிடைக்காதவர்கள் மருந்துக்கடைகளில் கிடைக்கும் ஸ்பைருலினா கேப்ஸ்யூலில் உள்ள பவுடரை பயன்படுத்தலாம்) இவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் தடவி வரலாம்!

No comments :

Post a Comment