ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தேர்தலுக்கு முன்பே தீர்ப்பா?

Share this :
No comments


சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், சசிகலா தரப்பு இறுதிவாதமும் முடிவடைய உள்ளதால், இவ்வழக்கில் தேர்தலுக்கு முன்பே தீர்ப்பு வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேகர் நாப்தே, தமது வாதத்தை வியாழக்கிழமையுடன் நிறைவு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். வருமானத்திற்கு அதிகமாக ரூ. 66 கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோரை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.

ஆனால், சொத்து மதிப்பை தவறாக கணக்கிட்டு, இவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக கூறி கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடியும் மற்ற மூவருக்கும் தலா ரூ. 10 கோடியும் அபராதம் விதித்து வழங்கியிருந்த தீர்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசு தனது மனுவில் கூறியிருந்தது.

இம்மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட, நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்து வருகிறது. இதில், முதலாவதாக கர்நாடக அரசுத் தரப்பில் மூத்தவழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பி.வி.ஆச்சார்யா ஆகியோரும், மூல மனுதாரர் என்ற வகையில் சுப்பிரமணியசாமியும் தங்கள் தரப்பு இறுதிவாதத்தை முன்வைத்தனர்.

அதைத்தொடர்ந்து ஜெயலலிதா தரப்பில், மூத்தவழக்கறிஞர் நாகேஷ்வரராவ் இறுதிவாதத்தை எடுத்து வைத்தார். செவ்வாயன்று சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி சார்பில் வழக்கறிஞர் சேகர் நாப்தே தனது வாதத்தை முன்வைத்தார்.

அவர் தனது வாதத்தை வியாழக்கிழமை முடிக்க உள்ளதாக நீதிபதிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து, கர்நாடக தரப்பு மீண்டும், பதில் வாதம் செய்ய நீதிபதி அவகாசம் தரும் பட்சத்தில், அடுத்த சில நாட்களில், அதுவும் முடிந்து, தீர்ப்பு தேதிஅறிவிக்கப்படக் கூடும் என்று மூத்த வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

No comments :

Post a Comment