பேச்சுலர்களுக்கான... ஈஸியான பட்டாணி மசாலா

Share this :
No comments

இரவில் சப்பாத்தி சாப்பிடப் போகிறீர்களா? அதற்கு சைடு-டிஷ்ஷாக எப்போதும் உருளைக்கிழங்கு மசாலா செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் இன்று பச்சை பட்டாணி கொண்டு மசாலா செய்து சுவையுங்கள்.

இது பேச்சுலர்கள் செய்யும் அளவில் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டது. சரி, இப்போது அந்த பட்டாணி மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி - 1 கப்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிது

எண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு...

வெங்காயம் - 1 (நறுக்கியது)

தக்காளி - 3 (நறுக்கியது)

செய்முறை: முதலில் பச்சை பட்டாணியை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். 

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, அரைத்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதக்கி, வேக வைத்துள்ள பட்டாணியை சேர்த்து குறைவான தீயில் 5 நிமிடம் பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், பட்டாணி மசாலா ரெடி!!!