சென்ற வாரம் நூற்றுக்கணக்கான பொறியாளர்கள், 'எல் & டி நிறுவனம், தங்களுக்கு வேலை வழங்குவதாக பணி உறுதிக் கடிதம் வழங்கிவிட்டு ஏமாற்றிவிட்டது' என போராட்டம் செய்த நிலையில், இப்போது ஃப்ளிப் கார்ட் நிறுவனமும் அதுபோல் ஒரு தவறை செய்திருக்கிறது. இம்முறை பாதிக்கப்பட்டவர்கள் 45 ஐஐடி மற்றும் ஐஐஎம் மாணவர்கள்.
நடந்தது இதுதான்
சில மாதங்களுக்கு முன், வளாக நேர்காணலில் இந்தியா முழுவதும் உள்ள 10 ஐஐடியை சேர்ந்த 45 மாணவர்களுக்கு, பணி உறுதிக் கடிதத்தை ஃபிளிப் கார்ட் அளித்தது. அதன்படி அந்த மாணவர்கள் அனைவரும் ஜூன் மாதம் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் மே 16 அன்று, ஃப்ளிப்கார்ட் நிறுவனம் ஐஐடிக்கு ஒரு கடிதம் அனுப்புகிறது. அதில், “நிறுவனத்தின் உள்ளே சில பணிகள் நடப்பதால், எங்களால் முன்பே பணி உறுதிக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள படி, அந்த மாதத்தில் பணி வழங்க முடியாது. அனைவரும் டிசம்பர் மாதம் பணியில் சேருங்கள்.” என்று குறிப்பிடுகிறது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஐஐடி நிர்வாகம், இது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி, மே மாதத்தில் இரண்டு கடிதங்களை அனுப்புகிறது. ஆனால், ஃப்ளிப் கார்ட் நிறுவனம் தன் முடிவில் உறுதியாக இருக்கிறது.
இந்த சூழலில், ஏற்கெனவே ஐஐடியில் படித்து இப்போது ஃபிளிப் கார்ட்டில் பணி செய்யும் ஊழியர்கள் களத்தில் இறங்குகிறார்கள். அவர்கள் ஃப்ளிப் கார்ட் நிறுவனத்திற்கு அழுத்தம் தருகிறார்கள். அவர்களது நிர்ப்பந்தம் காரணமாக, பாதிக்கப்பட்ட 45 மாணவர்களுக்கும் 7 மாதகாலத்திற்கு வேறு சில சிறு நிறுவனங்களில் ஐம்பாதாயிரம் மதிப்பூதியத்தில் உள்ளக பயிற்சிக்கு (internship) ஏற்பாடு செய்கிறது ஃப்ளிப் கார்ட் நிறுவனம்.
இது குறித்து ஐஐடி வேலைவாய்ப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கவுஸ்தாபா கொகந்தி, “ஏழு மாத காலம் உள்ளக பயிற்சிக்கு ஏற்பாடு செய்வதாகவும், ஃப்ளிப் கார்ட் உடனான அதிகாரபூர்வ ஒப்பந்தம் டிசம்பர் 1 ம் தேதி முதல் தொடங்குமென்றும், அதற்கான கடிதத்தை விரைவில் அனுப்புவதாகவும் அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
நாங்கள் இம்மாணவர்கள், டிசம்பர் மாதம் ஃப்ளிப் கார்டில் சேரும் போது, ரூபாய் 1.5 லட்சத்தை ஊக்க தொகையாக தரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளோம்” என்றார்.
பிளாக்லிஸ்ட் செய்யப்பட்ட நிறுவனங்கள்:
ஃப்ளிப்கார்ட் மட்டுமல்ல, ரோட்ரன்ர் என்கிற இன்னொரு நிறுவனமும், இதுபோல் ஜூன் மாதம் தேதியிட்டு பணி உறுதிக் கடிதத்தை வழங்கிவிட்டு, இப்போது டிசம்பர் மாதம் மாணவர்களை பணியில் சேர சொல்கிறது. இதனால், இந்த நிறுவனத்தில் பணி உறுதிக் கடிதம் பெற்றவர்கள் கடும் மனம் உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.
இது குறித்து ஐஐடி வேலைவாய்ப்பு மையத்திற்கான ஆலோசகர் வி.பாபு, “நாங்கள் இது போல் அறமற்று செயல்படும் நிறுவனங்களை இனி எங்கள் வளாக நேர்காணலில் அனுமதிக்க வேண்டாமென்று இருக்கிறோம்.” என்கிறார்.
சில ஸ்டாட் அப் நிறுவனங்கள், உறுதி அளித்த சம்பளத்தை தராமல் மாணவர்களை ஏமாற்றுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் 7 சிறு நிறுவனங்களை பிளாக்லிஸ்ட் செய்ய ஐஐடி திட்டமிட்டுள்ளது. இவர்கள் அடுத்த ஆண்டிலிருந்து ஐஐடி வளாக நேர்காணலில் கலந்துகொள்ள முடியாது.
ஃப்ளிப் கார்ட் மாற்று ஏற்பாடுகள் செய்ததை அடுத்து, ஐஐடியின் இந்த நடவடிக்கையிலிருந்து தப்பிவிட்டது.
ஐஐடி வளாக நேர்காணல்கள்:
ஐஐடி வளாக நேர்காணல்களில் ஆட்களை எடுக்க நிறுவனங்கள் கலந்து கொள்வதென்பது கடினமான காரியம். உலக அளவில் சிறந்த நிறுவனங்கள் மட்டும்தான் அனுமதிக்கப்படும். அதுவும் முதல் நாள் நேர்காணலில், மைக்ரோசாஃப்ட், கூகுள், யாகூ போன்ற உலக தரமான நிறுவனங்கள் பங்குபெறும். அவர்கள் தங்கள் நிறுவனத்திற்கு ஆட்களை எடுத்தபின்தான் அடுத்தடுத்த நாட்களில் மற்ற நிறுவனங்கள் அனுமதிக்கப்படும். சில ஆண்டுகளாக ஃப்ளிப் கார்ட் நிறுவனம் முதல் நாள் நேர்காணலில் பங்கு பெற்று வந்தது. இனி அந்த நிறுவனத்திற்கு முதல் நாள் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று தெரிகிறது.
எல் & டியும், ஃப்ளிப் கார்ட்டும்...
ஃப்ளிப் கார்ட் நிறுவனத்தால் தம் மாணவர்களுக்கு ஒரு சிக்கல் என்றவுடன், ஐஐடி நிறுவனம் உடனே களத்தில் இறங்குகிறது; தொடர் அழுத்தம் தருகிறது. இத்தனைக்கும் அவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட வேலையை ஃப்ளிப் கார்ட் மறுக்கவில்லை, ஏழு மாதங்கள் மட்டுமே தள்ளிப்போடுகிறது. ஆனால், எல் & டி நிறுவனம் 1500 பேருக்கு பணி உறுதி கடிதத்தை வழங்கிவிட்டு, இப்போது வேலை இல்லை என்கிறது. இதில் 600 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள். மாணவர்கள் கடந்த இரண்டு மாத காலமாக தங்களுக்கு தெரிந்த அனைத்து வழிகளிலும் போராடி விட்டனர். ஏன் பட்டினி போராட்டமும் இருந்துவிட்டனர்.... ஆனால், கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் அந்த மாணவர்கள் படித்த கல்லூரிகளும், அரசும் மெளனமாக இருக்கின்றன. குறைந்தபட்சம், அம்மாணவர்களின் போராட்டத்திற்கு கூட ஆதரவளிக்கவில்லை.
உடனடியாக அரசு இதில் தலையிட்டு, இதற்கு தீர்வு காண அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். 1500 பொறியாளர்களின் கனவுகளை கருக்கிவிடக் கூடாது.
No comments :
Post a Comment