'அப்படியென்றால் உன்னுடைய மகளை எனக்கு திருமணம் செய்து கொடு...!'- 4 பெண்கள் கொலையில் 'பகீர்' பின்னணி!

Share this :
No comments

சென்னை ராயப்பேட்டையில் நான்கு பெண்களை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பிய வாலிபரை போலீசார் தகவல் கிடைத்த 2 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர். போலீசாரிடம் பிடிபட்ட வாலிபரின் பெயர் சின்ராஜ். ஸ்வீட் மாஸ்டர். காரைக்குடியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்தவர், சென்னையிலேயே தங்கி ஆர்டரின் பேரில் இனிப்புகளை தயாரித்துக் கொடுத்து வந்திருக்கிறார். சென்னை ராயப்பேட்டையில், பழைய போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள முத்து தெருவில் உள்ள மாடி வீட்டில்தான் சின்ராஜ் வசித்து வந்தார். அவர் வசித்து வந்த வீட்டில் இருந்துதான் இன்று (24.6.2016) காலை துர்நாற்றம் வீசியிருக்கிறது. குடியிருப்பு வாசிகள் கொடுத்த தகவலின் பேரில், அந்த வீட்டின் அருகே செல்லும்போதே வெளியேறிக் கொண்டிருந்த துர்நாற்றத்தின் மூலம் உள்ளே அழுகிக் கிடப்பது, மனித உடல்தான் என்று புரிந்து கொண்டனர். இதையடுத்து ஆம்புலன்ஸை வரவழைத்து விட்டு அந்த வீட்டுக்கதவை உடைத்தனர். வீட்டின் உள்ளே அழுகிய நிலையில் கிடந்த நான்கு பெண்களின் உடல்கள் உடனே உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அருகில் வசிப்போரிடம் விசாரித்ததில், 'அந்த நால்வரும் தாய், மூன்று மகள்கள், ஆவர். இவர்களுடன் சின்ராஜ் என்ற குடும்பத் தலைவரும் இருந்தார்' என்று தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தில் தாய், மூன்று மகள்கள் பிணமாக கிடக்கும் போது, அந்த இடத்தில் கணவனோ மற்ற உறவினர்களோ இல்லை என்ற சூழ்நிலையில் நான்கு பேரும் கொலை செய்யப்பட்டனரா, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனரா என்ற கேள்விக்கு சின்ராஜ்தான் பதில் சொல்ல முடியும் என்பதால், போலீசாரின் மொத்த கவனமும் சின்ராஜ் மீது திரும்பியது. சின்ராஜ் யார்... எங்கே வேலை செய்கிறார் என்பதில் தொடங்கி, அவருடைய அங்க அடையாளம் வரை அருகில் குடியிருப்போரிடம் நடத்தப்பட்ட அடுத்தடுத்து விசாரிப்பில் வெளிவரவே, போலீசார் சின்ராஜை தேடும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். காரைக்குடி , திருப்பத்தூர்- கட்டையாம்பட்டி கிராமம்தான் பாண்டியம்மாளுக்கு பூர்வீகம். பரிமளா , பவித்ரா என்ற பதினாறு வயதில் உள்ள இரட்டைக் குழந்தைகளும், சினேகா என்று 14 வயதில் ஒரு பெண் பிள்ளையும்தான் பாண்டியம்மாளின் ஒரே சொத்தாக இருந்துள்ளனர். இந்நிலையில் தகவல் வெளியான சில மணித் துளிகளில், சின்ராஜை போலீசார் பிடித்து நடத்திய விசாரணையில் சின்ராஜ், "கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பாண்டியம்மாள், காரைக்குடி டவுனில் ஸ்வீட் கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்த என்னுடன் வைத்த நட்பு, எங்களை சென்னைக்கு வரவழைத்தது. மூன்று பெண் பிள்ளைகள் உடன் இருந்தும் , ' என் பிள்ளைகள் போல் அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று நான் சொன்ன வார்த்தைகளை நம்பி, ஐந்தாண்டுகளுக்கு முன்னர் பாண்டியம்மாள், சென்னைக்கு என்னோடு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வந்தார். கொலையாகிக் கிடந்த இந்த வீட்டில்தான், 'சின்ராஜ் என் கணவர், எங்களுக்கு மூன்று பிள்ளைகள்' என்ற அறிமுகத்துடன் வீடு வாடகைக்குப் பிடித்தார். பட்டினப்பாக்கத்தில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் நான் ஸ்வீட் மாஸ்டராக வேலைக்கு சேர்ந்தேன். எனக்கு பாண்டியம்மளை விட எட்டு வயதுக் குறைவு. இன்னும் திருமணம் ஆகவில்லை. சென்னையில் நான் வேலை செய்து ஊருக்குப் பணம் அனுப்புவது போலதான் உறவினர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் பாண்டியம்மாளை அழைத்துக் கொண்டு வந்தது யாருக்கும் தெரியாது. பாண்டியம்மாள் பிள்ளைகளுடன் போன வாரம்தான் நாங்கள் மொத்தமாக ஊருக்குப் போய்த் திரும்பினோம். பாண்டியம்மாளை சென்னையில் பார்த்ததாக அனைவரும் நம்பும்படி சொல்லி வைத்தேன். பாண்டியம்மாளும், சென்னையில் பெரிய கம்பெனியின் முதலாளி வீட்டில் வேலை செய்வதாக சொல்லி வைத்திருந்ததால் யாருக்கும் சந்தேகம் எழவில்லை. சென்னைக்கு வந்த பின்னர்தான், நான் பாண்டியம்மாளிடம், ஊரில் எனக்கு பெண் பார்த்துக் கொண்டிருப்பதாக சொன்னேன். அவர் ஆத்திரப்பட்டு என்னை திட்டினார். 'உன்னை நம்பி வந்த என்னை ஏமாற்றாதே என்றார்'. அப்போது நான் , 'அப்படியென்றால் உன்னுடைய பெரிய மகளை எனக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டால், நான் உன்னோடேயே இருக்கிறேன்' என்றேன். பாண்டியம்மாளுக்கு என்னுடைய பதில், கோபத்தை ஏற்படுத்தியது. அழுது கூப்பாடு போட்டு இரவெல்லாம் கத்திக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில், 'உன்னை சாதாரணமாக விட மாட்டேன், ஊருக்குப் போன் செய்து நீ என்னுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பதை சொல்லப் போகிறேன்' என்றார். பாண்டியம்மாளை இனியும் விட்டால் ஆபத்து என்ற முடிவில்தான், நான் அவரை கம்பியால் அடித்துக் கொலை செய்தேன். தடுக்க வந்த மற்ற மூவரையும் அதேபோல் கொலை செய்தேன்" இப்படியாக சின்ராஜ் வாக்கு மூலம் போயிருக்கிறது. ஆனாலும் சின்ராஜ் ஒருவரே நான்கு பேரையும் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் சின்ராஜை அடிக்கடி தேடிவரும் சிலர், கடந்த நான்கு நாட்களாக அவரைத் தேடி வரவில்லை. கொல்லப்பட்ட உடல்கள் அழுகிய நிலைக்குப் போன இரண்டு மணி நேரத்தில் அருகாமையில் உள்ள மெரீனா பீச்சிலேயே சின்ராஜ் போலீசில் சிக்கியிருப்பதும் பல ஐயங்களை ஏற்படுத்தி இருக்கிறது!

No comments :

Post a Comment